Skip to main content

துப்பறியும் சாம்பு - தேவன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் ரேவதி சங்கரன்

கல்லூரி காலங்களில் தேர்வுகளுக்கு அறை நண்பன் அப்துல் எங்களுக்கு பாடம் சொல்லித் தருவதுண்டு. சில நேரங்களில் அவன் சொல்லித் தருவதற்கு பதில் வரிக்கு வரி படிக்க ஆரம்பித்து விடுவான்.அந்த சமயங்களில் முத்து அவனை கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும் பொறியியல் பாடங்களில் அப்படி எதிர்பார்ப்பது நியாயமில்லை தான். ஆனால் எனக்கு சில சமயங்களில் கதை சொல்வதென்பதெ வரிக்கு வரி படித்துக் காட்டுவதாகி விளக்கெண்ணெய் வழிய ஆரம்பித்துவிடுகிறது.

சில நாட்களாக ரேவதி சங்கரனின் குரலில் துப்பறியும் சாம்பு ஒலிப்புத்தகம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் கதைகளை வரிக்கு வரி படித்துத் தான் காட்டவேண்டும். ஆனால் ஒவ்வொரு கதையிலும் குரலிலேயே மோனோ ஆக்டிங் நடத்துகிறார். தேவனின் ஹாஸ்யங்களை அநாயாசமாய் தன் குரலில் கொண்டு வருகிறார். சாம்பு, வேம்பு, சுந்து பயல் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலன் குரல்களைக் கேட்டுக் கொண்டே தினமும் தூங்கிப் போகிறோம்.

சிறு வயதில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் பார்த்த சாம்பு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி தவிர்த்து வேறு யாரும் நினைவில் இல்லை. அந்த ஒட்ட வைத்த மூக்கும் தலைக்கு நடுவில் ஒட்டியிருக்கும் வழுக்கையும் நினைவில் இருக்கிறது. நாடகமாக வந்த கதைகள் ஏதும் இப்போது நினைவில் இல்லை. கல்யாணத்தில் நகையை உருண்டைக்குள் மறைத்து வைக்கும் நாடகம் மட்டும் சற்று நினைவில் இருக்கிறது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது இந்த நாடகங்களின் டிவிடிக்களை வாங்க வேண்டும். ஒய்.ஜி.மகேந்திரனின் ஷெர்லாக் மாமி என்ற துப்பறியும் நாடகங்கள் சில யூ ட்யூபில் உள்ளன. ஆனால் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

வேலைக்கு சேர்ந்த பின் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட தேவனின் துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகன்னாதன் மற்றும் கோமதியின் காதலன் நூல்களை வாங்கினேன். எந்த உபத்திரவமும் இல்லாத படிக்க எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் எழுத்து தேவனுடையது. எல்லாக் கதைகளுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அமைப்புதான். சாம்புவுக்கு உண்மையிலேயே துப்பறிய தெரியாது. ஆனாலும் சாம்புவால் தான் அனைத்து குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றனர். தேவனின் கதைகள் நிகழும் காலம் இந்திய விடுதலைக்கு முன்பு. சென்னையின் பல இடங்களில் கதை நடக்க்கும். சுஜாதாவின் கணேஷ் வசந்தும் சென்னையின் பல இடங்களில் (முக்கியமாக தம்பு செட்டித் தெரு) சுற்றும் நினைவு உடனே வருகிறது. ஊர்களும் இடங்களும் கதைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது உண்மைதான்.

Comments

Popular posts from this blog

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...

கி ரா மற்றும் கோபல்ல கிராமம்

எழுத்தாளர் கிராவின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், மறைவாய் சொன்ன கதைகள், கிடை (குறுநாவல்), மாயமான் தொகுப்பில் சில கதைகள் மற்றும் கி.ராஜநாரயணன் கதைகள் தொகுப்பில் சில கதைகள் என வாசித்திருக்கிறேன். புதுவை இளவேனில் தொகுத்த உயிர்க்கோடுகள் நூலின் சில பகுதிகளை கிராவின் எழுத்துக்காகவும் ஓவியர் ஆதிமூலத்தின் அழகான கோட்டோவியங்களுக்காவும் படித்திருக்கிறேன். கோபல்ல கிராமம் நாவலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வாசித்தேன். நான் வாசித்த கிராவின் முதல் நூல் அது. அனைவரையும் போல அழகான வட்டார எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும் போது புதிய சில தெளிவுகள் கிடைத்தன.  விடியலை இரவு உயிர்களை முன்வைத்து சொல்லியிருப்பதே அழகாயிருந்தது ( இரவு தூங்க ஆரம்பித்துப் பகல் விழிக்கப் போகும் நேரம். ) பசு / எருமை, தென்னை/பனை போன்றவற்றை பிரம்மா விஸ்வாமித்திரனை முன்வைத்து கிரா எழுதியிருப்பது  // போட்டி உலகத்தை உண்டாக்கிய விஸ்வாமித்திரன்தான் பசுமாடுகளுக்குப் போட்டியாக எருமை மாடுகளையும், தென்னைமரத்துக்குப் போட்டியாக பனை மரத்தையும், மூஞ்சூறுக்குப் போட்டியாக பெருச்சாளியையும் உண்டாக்...