காஞ்சிபுரம் அருகே உள்ள எங்கள் கிராமத்தின் ஓர் எல்லையில் கைலாசநாதர் கோயிலும் இன்னோர் எல்லையில் சஞ்சீவிராயர் கோயிலும் உள்ளன. சஞ்சீவிராயர் ஆலயத்தை விஜயநகர ஆட்சிகாலத்தில், 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், லட்சுமி குமார தாத தேசிகர் எடுப்பித்தார். தாதசமுத்திரம் எனும் 130 ஏக்கர் அழகான ஏரியையும் வெட்டி(கட்டி)யுள்ளார். கைலாசநாதர் கோயிலைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளேதும் இல்லை. இக்கோயில்களின் மூலவர்கள் மட்டுமே கோயிலினுள்ளே உள்ளனர். உற்சவமூர்த்திகள் ஊரின் நடுவே உள்ள அளவில் சிறிய சுப்ரமணியர் ஆலயத்திலும் செல்வ விநாயாகர் ஆலயத்திலும் உள்ளன. முதன் முதலாக இதன் காரணம் தெரிந்த போது அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. 1960களில் சஞ்சீவிராயர் கோயிலின் உற்சவர் சஞ்சீவிராயரைத் திருடிச்சென்றுவிட்டனர். திருச்சியில் ஏதோ துணிக்கடையில் சேலைத் தொடர்பான உரையாடலில் சீலை என்ற சொல்லால் நிகழ்ந்த குழப்பத்தில் துணி வாங்க வந்தவர்கள் சிலைத் திருட்டைப் பற்றி உளறிவிட்டிருக்கின்றனர் (எங்கள் சஞ்சீவிராயர் அப்படி உளறவைத்தார் என்பது நம்பிக்கை). அன்றிரவு பிற உற்சவ மூர்த்திகளுடன் வெளிநாடு கடத்தப்பட இருந்த சிலைகள் மீட்கப்பட்டு...