இந்த ஆண்டு முழுக்க பயணம் இருந்து கொண்டே இருந்தது. ஆண்டின் பெரும்பகுதி பாங்காக் நகரத்தில் கழிந்தது. ஒரு முறை ஜகார்த்தாவிற்கு செல்ல வேண்டியிருந்தது. நண்பர்களுடன் தமிழ்நாட்டின் அருவிகளுக்கு (முக்கியமாக மேற்கு மலைத்தொடர்ச்சியோரம்) ஒரு சாலை வழிப் பயணம் சென்றேன். சென்னையில் கிளம்பி திற்பரப்பு, காளிகேசம், களக்காடு தலையணை அருவி, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு, குற்றாலம், குண்டாறு அருவி, கும்பவுருட்டி, சின்னச்சுருளி மற்றும் கும்பக்கரை சென்று திரும்பினோம். கன்னியாகுமரி முழுக்க ஜெயமோகன் கதைகளில் இறங்கி திரிவது போல இருந்தது. ஆரல்வாய்மொழி கணவாய், திற்பரப்பு அருவியின் இரவு, ஆற்றங்கரையோர இசக்கி (யக்ஷி), ரப்பர் மரங்கள், மகாதேவர் ஆலயம், திருவட்டாறில் நாகப்பிரதிஷ்டை செய்த அரசமரம், கதகளி அரங்கம், கீரிப்பாறை, பழம்பொறி, ரசவடை என. நாங்கள் ஜூலை முதல் வாரத்தில் பயணித்தோம். திருநெல்வேலிக்கு வடக்கே ஒரு அருவியிலும் நீரில்லை. திற்பரப்பிலும், காளிகேசத்திலும், களக்காடு தலையணையிலும் ஊறிப்போய் வந்தோம். இந்த ஆண்டு விஷ்ணுபுர வாசக வட்டத்தின் ஊட்டி காவிய முகாமில் கலந்து கொண்டேன். மூன்று நாட்களும் உற்சாகமாக இருந்தது. ...