Skip to main content

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்

2007 அல்லது 2008 ஆம் ஆண்டு வாக்கில் இந்த புத்தகம் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த சமயத்தில் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ஓரளவிற்கு படிக்க ஆரம்பித்திருந்ததால் இந்நூலை படிப்பது சிரமமாக இருக்கவே வைத்து விட்டேன். இப்போது முழுதாக படிக்க முடிந்தது. கோட்பாடு சார்ந்த பகுதிளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் படிப்பதற்கு இனிமையாகவே இருந்தது. ஜெயமோகனின் கட்டுரைகளின் பிரதியின்பம் எனக்கு மிகவும் பிடித்தது.

இந்த நூலின் சில கட்டுரைகளைத் தனியாக படித்திருக்கிறேன். நூலில் நான்கு பெரும் பிரிவுகளில் முதல் மூன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறிமுகம் மற்றும் அடிப்படைகள் பகுதிகளை இரண்டு முறைக்கு மேல் வாசித்தேன். இனிமேலும் அடிக்கடி வாசிப்பேன் என்றே நினைக்கிறேன். இதுவரை தமிழ் நவீன இலக்கியத்தின் வளர்ச்சிகள் மற்றும் போக்குகளை புரிந்துகொள்ள வரலாறு பகுதி உதவியது. நூலில் 800க்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்துள்ளேன். இந்த நூல் ஏறக்குறைய ஒரு பாடபுத்தகம் மாதிரி தான். வாசகனாக இந்த நூலை பாட நூலாக அணுகினாலும் இந்த நூலின் தெளிவான விளக்கங்களும் பிரதியின்பமும் முக்கியமானவை. பாடப்புத்தகங்களில் எளிதில் கிடைக்காத பண்பு.

இலக்கிய வாசிப்பின் படிநிலைகள் எனக்கு முக்கியமான கட்டுரையாகப் படுகிறது. இந்த நூலை முதன் முதலில் படித்த காலத்துக்கு (2008) இப்போது கொஞ்சம் முன்னேறி இருக்கிறேன் என்றாலும் தல்ஸ்தோய் அல்லது தஸ்தாவெய்ஸ்கி படிப்பது என்னளவில் இன்றும் கடினமாகவே இருக்கிறது. சிறு வயதில் வீட்டில் குமுதம், மாலைமதி, கண்மணி வாங்குவார்கள். கண்மணியில் நாவலுடன் ஒரு சிறு படக்கதை இருக்கும். என் நினைவில் அதுதான் இருக்கிறது. அதற்கு பிறகு விகடன், தமிழ் இந்தியா டுடே, கல்லூரியில் ராஜேஷ்குமார், சாண்டில்யன், பாலகுமாரன், கல்கி, சுஜாதா என தொடர்ந்து நான் ஜெயகாந்தனுக்கு 2006 ஆம் ஆண்டு தான் வந்தேன். ஆனால் கல்லூரி காலத்தில் விகடனில் வந்த எஸ். ராமகிருஷ்ணனின் துணையெழுத்து மற்றும் கதாவிலாசம் எனக்கு மிகவும் பிடித்தவை. வாசிப்பின் படிநிலைகளில் என் தனிப்பட்ட அனுபவம் எனக்கு இதைப் படித்த பின்பு தான் தொகுக்க முடிந்தது.

இலக்கியம் என்னும் அறிதல் முறை இந்த புத்தகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. வெறும் கதைப்புத்தகங்கள் என்று என் குடும்பத்தில் சொல்பவர்களும் உண்டு. ஆனால் என் அம்மாவின் சித்தப்பா என்னுடைய புத்தகங்களைப் பார்த்து விட்டு புதுமைப்பித்தன் கதைகள் வைத்திருக்கிறாயா என்று கேட்டு வாங்கிப்படித்தார். இலக்கியம் கலையும் அறிவுத்துறையும் கலந்த அறிதல் முறை என்பது எனக்கு பெரிய திறப்புதான். இது நான் ஏற்கனவே சிலமுறை படித்த கட்டுரைதான். இலக்கிய விமர்சனம் என்பது தத்துவம் இலக்கியத்தை மதிப்பிடும் முறை என்பதும் எனக்கு பிடித்தது.

ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு பேச்சின் பின்புலத்திலிருந்தோ அல்லது பொதுப்புத்தியில் இருக்கும் ஒரு கேள்விக்கு பதிலாகத் தொடங்குவது புரிந்து கொள்ள எளிமையாக இருக்கிறது. வாசிப்பின் படிநிலைகள் மற்றும் இலக்கியத்தின் அடிப்படைகள் சார்ந்து எனக்கு பிடித்த சில வரிகளையும் இங்கே பதிந்து வைக்கத் தோன்றியதால் பகிர்கிறேன். புத்தகத்தைப் படிக்காமல் இவற்றை மட்டும் படித்தால் மகாவாக்கியங்கள் போல தோன்றும்.

1. வாசிப்பு என்பது எப்போதும் ஒன்றல்ல. வாசிப்பு என்பதற்குப் பல படிநிலைகள் உண்டு. சிலர் மட்டுமே தொடர்ந்து வாசித்து ரசனையை வளர்த்துக்கொண்டு இலக்கிய வாசகர்கள் ஆகிறார்கள்.

2. கதை கேட்கும் குழந்தைகள்தாம் கற்பனை செய்யப் பழகுகிறார்கள். சுயமாகச் சிந்திப்பது என்பதில் கற்பனையின் பங்கு முக்கியமானதாகும்.

3. வணிக எழுத்து பொதுவாக நான்கு வகையானது. 1. சாகசக் கதை, 2. குற்றக் கதை, 3. மெல்லுணர்ச்சிக் கதை, 4. லட்சியவாத எழுத்து.

5. சாண்டில்யனுடைய நாவல்கள் பெரிய திரையில் விரிவுபடுத்தப்பட்ட சாகசக் குழந்தை இலக்கியங்களே அன்றி வேறல்ல. ஒரு குறிப்பிட்ட வயதில் சாண்டில்யனின் நாவல்களைப் படிப்பதென்பது அவசியமான விஷயமே ஆகும்.

6. நுட்பங்களும் மின்னல் தெறிப்புகளும் இலக்கியத்தின் அழகியலில் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. ஆனால், இலக்கியம் அதன் உன்னத நிலையில் பெரும் கனவுகளை எழுப்புவது. அக்கனவுகளைத் தேடுபவனே, அக்கனவுகளுக்கு ஏற்ப மன விரிவு கொள்பவனே சிறந்த வாசகன். அத்தகைய வாசக உருவாக்கத்துக்கு இளம் பருவத்தில் லட்சியவாத எழுத்துடன் அறிமுகம் இருப்பது பெரிதும் உதவிகரமானது.

7. லட்சியவாதப் படைப்புகளின் கனவுகள் வாழ்வை எளிமைப்படுத்துவதன்மூலம் உருவாக்கப்படுபவை. பேரிலக்கியங்கள் வாழ்வின் சகல சிடுக்குகளையும் சிக்கல்களையும் ஊடுருவிச் சென்று தங்கள் கனவுகளை அடைகின்றன.

8. நான் பொழுதுபோக்குக்காகப் படிப்பவனல்லன்; வாழ்க்கையை அறிவதற்காகப் படிப்பவன்

9. ஜெயகாந்தனைத் தனது இலக்கிய வாசலாக எண்ணும் வாசகர்களே இன்னும் நவீனத் தமிழிலக்கியச் சூழலில் அதிகம்.

10. இலக்கியம், எந்த மொழியிலும் வாசகனின் ஊக்கத்தாலேயே அடையக்கூடியதாக உள்ளது. எல்லா இலக்கிய வகைகளையும் முன்முடிவுகள் இல்லாமல் திறந்த மனத்துடனும் ஊக்கத்துடனும் பயில்வதே இலக்கிய வாசகனுக்குரிய சிறந்த வழியாகும்.

11. ஒரு வாசகன் தொடர்ந்து வாசித்தபடி இருப்பான் என்றால் அவன் புரியாத படைப்புகளைத் தொடர்ந்து சந்தித்தபடியும் இருப்பான். புரியாத படைப்புகள் எரிச்சலைக் கிளப்புவது மிகவும் சகஜமான ஒன்று.

12. பெரும்பாலும் கூர்ந்து கவனித்துப் படிக்காமையினாலேயே படைப்புகள் புரியாமல் போகின்றன. படைப்புகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கூர்ந்து படிக்கவேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை.

13. இலக்கியப் படைப்பு என்பது கூர்ந்து கவனித்து உள்ளர்த்தங்களை சிந்தனை மூலமும் கற்பனை மூலமும் விரிவாக்கிக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

14. இலக்கியம் எக்கருத்தையும் சொல்வதற்காக உருவாக்கப்படுவதில்லை. இலக்கியம் நமக்கு ஒரு அனுபவத்தை அளிக்கிறது. அது உண்மையான வாழ்வனுபவம் போன்றது.

15. நல்ல வாசகன் நேரடியாகவே பேரிலக்கியப் படைப்புகளில் இருந்து அடிப்படைகளை உள்வாங்கிக் கொள்ள இயலும்.



Comments

Popular posts from this blog

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...

கி ரா மற்றும் கோபல்ல கிராமம்

எழுத்தாளர் கிராவின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், மறைவாய் சொன்ன கதைகள், கிடை (குறுநாவல்), மாயமான் தொகுப்பில் சில கதைகள் மற்றும் கி.ராஜநாரயணன் கதைகள் தொகுப்பில் சில கதைகள் என வாசித்திருக்கிறேன். புதுவை இளவேனில் தொகுத்த உயிர்க்கோடுகள் நூலின் சில பகுதிகளை கிராவின் எழுத்துக்காகவும் ஓவியர் ஆதிமூலத்தின் அழகான கோட்டோவியங்களுக்காவும் படித்திருக்கிறேன். கோபல்ல கிராமம் நாவலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வாசித்தேன். நான் வாசித்த கிராவின் முதல் நூல் அது. அனைவரையும் போல அழகான வட்டார எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும் போது புதிய சில தெளிவுகள் கிடைத்தன.  விடியலை இரவு உயிர்களை முன்வைத்து சொல்லியிருப்பதே அழகாயிருந்தது ( இரவு தூங்க ஆரம்பித்துப் பகல் விழிக்கப் போகும் நேரம். ) பசு / எருமை, தென்னை/பனை போன்றவற்றை பிரம்மா விஸ்வாமித்திரனை முன்வைத்து கிரா எழுதியிருப்பது  // போட்டி உலகத்தை உண்டாக்கிய விஸ்வாமித்திரன்தான் பசுமாடுகளுக்குப் போட்டியாக எருமை மாடுகளையும், தென்னைமரத்துக்குப் போட்டியாக பனை மரத்தையும், மூஞ்சூறுக்குப் போட்டியாக பெருச்சாளியையும் உண்டாக்...