Skip to main content

பாயும் தமிழகம்

ஐயங்கார்குளத்தில் ஒரு காலத்தில் பச்சியப்பா என்ற பெயர் கொண்ட ஆழ்குழாய் கிணறு தோண்டும் லாரியை அடிக்கடி காண முடியும். பட்டுச்சேலை நெசவுத்தொழிலின் வளமான காலங்களில் ஒன்று. பாயும் தமிழகம் நூலைப் படித்தவுடன் நினைவில் வந்தது.

1960 களில் கடும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த திருச்செங்கோடு விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை நீருக்காக தோண்டினர். மெதுவாக விவசாயத்தோடும். அதை விட்டும், ஆழ்துளை கிணறு தோண்டும் தொழிலில் இறங்கி இன்று தென்னிந்தியா முழுக்க அந்தத் தொழிலில் கொடிகட்டி பறக்கின்றனர். அது மட்டுமில்லாமல் அருகிலுள்ள நாமக்கல் பகுதியினர் இந்தத் தொழிலுக்கான உபகரணங்கள் தயாரிப்பதில் முன்னணியிலுள்ளனர்.

இம்மாதிரி தங்கள் முயற்சியால். உழைப்பால். அர்ப்பணிப்பால் தோன்றி வளர்ந்து இன்றைய தமிழகத்தின் இரத்தினங்களாக பல நிறுவனங்கள் உள்ளன. அம்மாதிரியான ஒவ்வொரு நிறுவனங்களைப் பற்றியும் தனியே ஒரு புத்தகமே எழுதலாம். சுசீலா ரவீந்திரநாத் ஒவ்வொரு நிறுவனத்தின் வரலாற்றைச் சுருக்கமாக எழுதியுள்ளார். முருகப்பா, டிவிஎஸ், அமல்கமேஷன் போன்ற குடும்ப நிறுவனங்கள், நாட்டின் சுதந்தரத்துக்கு முன் தொடங்கப்பட்ட நிறுவனங்கள், வாகன உற்பத்தி, விநியோகம், தகவல் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் சேவைகள், மருத்துவ தொழில் நுட்பம், கோழிப்பண்ணைகள், கொங்கு மண்டல ஆடை உற்பத்தி, பால் பொருட்கள் உற்பத்தி, ஷாம்பு சாஷே புரட்சி, 1960 களில் ஆரம்பிக்கப்பட்டவை, பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட நிறுவனங்கள் என அனைத்து தொழில்களைப் பற்றியும் எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் ஹூண்டாய் மற்றும் Ford நிறுவனங்கள் தொழிற்சாலை அமைத்த கதைகள் நம் மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு இருந்த அக்கறையைக் காட்டுகின்றன.

டிசிஎஸ் நிறுவனம் தமிழ் கம்ப்யூட்டர் சர்வீசஸ் மற்றும் தமிழ் கோபால் சர்வீசஸ் என்று கிண்டலிக்கப்படும் அளவுக்கு சென்னையில் வேரூன்றியிருக்கிறது. அதன் முதலிரு ப்ராஜக்ட்களில் பணிபுரிந்தவர்கள் தலைமை நிர்வாக அதிகாரிகளாகவும் (தற்போதைய டாடா சன்ஸ் குழும சேர்மன் சந்திரசேகர்) வேறு நிறுவனங்களையும் நிறுவும் அளவுக்கும் (சிடிஎஸ் லட்சுமி நாராயணன்) முன்னேறியுள்ளனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் டிசிஎஸ், சிடிஎஸ், போலாரிஸ், ஸோஹோ, Fresh desk, ராம்கோ சிஸ்டம்ஸ் என பல நிறுவனங்களின் கதைகள் உள்ளன.

சிவகாசியின் பதிப்பு தொழில், கோயம்புத்தூரின் வெட் கிரைண்டர் நிறுவனங்கள், விவசாய மோட்டார் மற்றும் பம்ப் தயாரிக்கும் நிறுவனங்கள், திருச்சியின் லயன் டேட்ஸ், சக்தி மசாலா என பல நிறுவனங்களின் அறிமுகமும் உள்ளது. MRF டயர் நிறுவனத்தைப் பற்றியும் நீண்ட அறிமுகம் உள்ளது. அப்பல்லோ மருத்துவமனைகளைப் பற்றியும் நல்ல அறிமுகம் உள்ளது.

சுதந்தரத்துக்குப் பிறகு நமக்கு வாய்த்த காமராஜருக்கும் ஆர்.வெங்கட்ராமனுக்கும் இதில் ஏராளமான பங்கு இருக்கிறது. வறட்சி மிகுந்த மாநிலமான நமக்கு தொழிற்சாலைகள் முக்கியமென கருதி செயல்பட்ட தலைவர்கள் அவர்கள். பின் வந்த ஆட்சியாளர்கள் ஓரளவிற்கு அதைத் தொடர்ந்தாலும் ஊழல்கள் தொழில் நிறுவனர்களை கவலையடைய வைத்திருக்கிறது.

நம் உண்மையான எதிர்காலம் இம்மாதிரியான துணிச்சலுடன் தொழில் தொடங்குபவர்களிடமே உள்ளது. இம்மாதிரியான நல்ல தமிழ் அபுனைவு புத்தகங்கள் எப்போதாவதுதான் படிக்கக் கிடைக்கின்றன.

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...